Saturday, March 31, 2012

கட்டுரைகள்
ஃபஹீமாஜஹானுடன் ஒரு நேர்காணல்
[28-Sep-2009]




ஒரு கவிஞராக இலங்கையின் தற்போதைய அரசியல் நிலையை எப்படிப் பார்க்கிறீர்கள்?

தற்போதைய இலங்கை அரசியலானது இனவாதக் கூறுகள் மேலோங்கிய ஒன்றாகவே காணப்படுகிறது. சிங்கள இனவாதத்தையும் பெளத்த மத பீடங்களின் அபிலாசைகளையும் நிறைவேற்றும் ஒரு அமைப்பாகவே அரசு இருந்து வந்துள்ளது. எதிர்காலத்திலும் அதன் செல்நெறியில் மாற்றம் நிகழப் போவதில்லை.

அதிகாரத்தில் இருப்பவர்கள் தங்களது நலன்களை வளர்த்துக்கொள்வதற்கான அரசியலை முன்னெடுத்துச் செல்லும் ஒரு போக்கையே காண முடிகிறது. ஜனாதிபதி மகிந்தவின் குடும்ப உறுப்பினர்களே மிக முக்கியமான அமைச்சுப் பொறுப்புகளில் உள்ளனர். அதிகாரம் அனைத்தையும் கொண்டவர்களாக அவர்களே திகழ்கின்றனர். நாட்டின் பாதுகாப்புப் படைப் பிரிவுகளையும் அவர்களே வழிநடாத்துகின்றனர். அவர்கள் எதைச் சொல்கிறார்களோ அதைச்செய்யும் காவல்நாய்களாக போலீஸ் பிரிவு இயங்கி வருகிறது. மோசடிகளையும் குற்றச் செயல்களையும் துணிந்து செய்யக் கூடியவர்களாக அரசும் அதன் பங்காளிகளும் காணப்படுகின்றனர்.

‘மனிதாபிமான முன்னெடுப்பு’ என்று கூறியவாறு தனது நாட்டு மக்களையே தினம் தினம் கொன்றொழிக்கும் ஒரு தலைமைத்துவமும் அதனை ஆதரிக்கும் பேரினவாதத்தின் குரல்களும் இந்தத் தீவை ஆள்கின்றன. மக்கள் கைவிட்டுச் சென்ற பூமியை அரச படைகள் தம் வசப்படுத்திச் சிங்கக் கொடியைப் பறக்க விடுவதை அரச தொலைக்காட்சிகள் காண்பிக்கும்பொழுது நாடெங்கிலுமுள்ள பேரினவாதிகள் பட்டாசு கொளுத்தியவர்களாக வீதிகளில் இறங்கிக் கும்மாளமிடுகின்றனர். வடக்கில் மக்கள் உடல் சிதறியவர்களாக வன்னி மண்ணெங்கும் வீசப்பட்டுக் கிடக்கையில், தெற்கில் உள்ள சிங்களவர்களோ இராணுவத்தைப் புகழ்ந்தவாறு வீதிகளில் இறங்கி ஆரவாரம் செய்து மகிழ்கின்றனர். ஊர்வலங்களை நடாத்துகின்றனர்.
இந்த இழிசெயலைத் தொடக்கி வைத்த கைங்கரியத்தையும் அரசுதான் செய்தது. கிழக்கில் ‘குடுமி மலை’ பிரதேசத்தை அரசபடைகள் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் அதனைத் தேசிய விழாவாகக் கொண்டாட வேண்டும் என அரசு தனது நிறுவனங்களையும் மக்களையும் பணித்திருந்தது. சிங்களவர்களின் கலாசாரப்படி பாற்சோறு, அதிரசம் போன்றவை பரிமாறி குறித்த நேரத்தில் நாடெங்கிலும் அதனைக் கொண்டாடுமாறு ஊடகங்களினூடாகக் கோரிக்கை விடுத்தது.
நாடு மிகமோசமான பொருளாதார வீழ்ச்சியை அடைந்துள்ளது. நாட்டின் எரிபொருள் விலையைக் குறைப்பதற்காக நீதிமன்றமே அரசை நிர்ப்பந்திக்கும் ஒரு சூழல் இங்கு உருவாகியிருந்தது. அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஈடுபடுபவர்கள் கொலை செய்யப் படுகிறார்கள். அல்லது மிக மோசமாகத் தாக்கப்படுகிறார்கள். முன்னைய காலங்களைப் போல தற்போது அரசுக்கு எதிரான போராட்டங்கள் எவையுமே நடைபெறுவதில்லை.
அரசியல்வாதிகளின் நலன்களுக்காகவே நாட்டில் எல்லாம் நடைபெறுகிறது. அப்பாவி உயிர்களைப் பறித்தும் அநியாய மாகக் குருதி ஆற்றை ஓட வைத்தும் முன்னெடுக்கப்படும் இந்த அரசியல், எதிர்காலத்துக்காக சாபங்களை மாத்திரமே எஞ்ச வைத்துள்ளது.

அங்கு மிகச்சிறிய நம்பிக்கையாவது எஞ்சி இருக்கிறதா?

இல்லை. எதுவுமே இல்லை. இனவாதக் கோசங்களே இங்கு மேலோங்கியுள்ளன. அரச ஆதரவும் இதன் பின்னணியில் உள் ளது. ஊடகங்கள் அனைத்தும் மிகமோசமாக அடக்கப்பட் டுள்ளன. யுத்தத்துக்கு எதிரான எந்தக் குரலையும் ஊடகங் களினூடாகக் கேட்க முடியாத நிலைமையே இங்கு காணப் படுகின்றது. ஊடகங்களும் தமது தார்மீகப் பொறுப்பிலிருந்து நழுவியுள்ளன. அரசின் பொய்களைப் பிரச்சாரப்படுத்தும் பணியை அவை மிகச்சிறப்பாகச் செய்து வருகின்றன.

தனது செயற்பாடுகளை விமர்சிப்பவர்களை அரசு மிக இலகுவாகக் கொன்றொழிக்கிறது. சமாதான முன்னெடுப்புகள் யாவும் கைவிடப்பட்டுக் கிடக்கின்றன. இனி ஒருபோதும் அரசு சமாதானத்துக்கான பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளப் போவதில்லை.
தமிழர்களின் உரிமைக்காக யார் குரல்கொடுத்தாலும் அல்லது செயற்பட்டாலும் அவருக்கு மரணம் காத்திருக்கிறது. தமது நாட்டில் ஒரு சிறுபான்மை இனம் கொல்லப்படுவது சிங்களப் பெரும்பான்மையினத்தைப் பாதிக்கவே இல்லை. யுத்தத்தை முன்னெடுத்துச் செல்வதொன்றே எல்லோர் குருதியிலும் மிக உக்கிரத்துடன் ஓடிக்கொண்டிருக்கிறது. அண்மைக் காலத்தில் பொதுமக்களை இலக்கு வைத்து புலிகள் மேற் கொண்ட தாக்குதல்கள் இந்த முடிவை மக்களிடையே மாற்றுக் கருத் துக்கிடமின்றித் திணித்துள்ளது. இந்நிலையில் சமாதானம் குறித்தோ அமைதி குறித்தோ பேசப்படும் குரல்கள் எவையுமே எடுபடப் போவதில்லை.

தற்போது வடக்கில் நிகழ்த்தப்படுவதைப் போன்றதொரு மானுடத்தின் பேரவலத்தை கிழக்கிலும் அரசு நடாத்தி முடித்தது. கிழக்கு மக்களைப் புலிகளின் பிடியிலிருந்து மீட்டெடுத்து சமாதானச் சூழலை மக்களுக்கு வழங்கியுள்ளதான மாயையைத் தெற்கில் அது பரப்பி வருகின்றது. ஆனால் கிழக்கில் கொலைகளும் வன்முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித் துக்கொண்டே செல்கின்றன. அத்துடன் அரசு மிகவும் திட்டமிட்டு சிங்களக் குடியேற்றங்களையும் எல்லை விஸ்தரிப்புகளையும் பாரம்பரியமாகத் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்குரிய நிலங்களை அபகரிப்பதையும் அந்த மக்களுக்கேயுரிய கடல் மற்றும் வனவளங்களைச் சூறையாடுவதையும் அந்த வளங்களை வெளிநாட்டு நிறுவனங்களிடம் கையளித்து பண மீட்டுவதிலும் ஈடுபட்டு வருகின்றது. கிழக்கில் நடைபெற்றுவரும் நிகழ்வுகள் மிகவும் மோசமான எதிர்காலச் சூழலுக்குக் கட்டியம் கூறி நிற்கின்றன.

அத்துடன் கிழக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவர்களுக் கென்று தனித்துவத்துடன் இயங்கி வரும் இரண்டு பல்கலைக் கழகங்களிலும் மிக அதிகளவான சிங்கள மாணவர்களை அனுமதித்து அரசு இனவாதிகளின் திட்டங்களுக்குச் செவிசாய்த்துள்ளது. இனவாதிகளின் மிகத் தந்திரமான ஆலோசனைகளின்படி கிழக்கு மக்களின் உயர்கல்வி வாய்ப்புகளிலும் பல்கலைக்கழ கங்களுடன் சார்ந்த தமிழ், முஸ்லிம் சமூகங்களின் கல்வி, கலாசார, பண்பாட்டு வளர்ச்சியிலும் பல்வேறு தடங்கல்ளையும் ஏற்படுத்தி படிப்படியாக அவற்றின் கூர்மையை மழுங்கடித்து விடும் செயலை ஆரம்பித்து வைத்துள்ளது.

இதைப் போன்ற அல்லது அதைவிடவும் சிக்கலானதொரு எதிர்காலமே வடக்கிலும் ஏற்படப் போகின்றது. எதிர்கால வன்முறைகளுக்கும் அமைதியின்மைக்கும் மிகச் சாதகமான பின்னணி இங்கு உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கையில் எத்தகைய நம்பிக்கைகளை நாம் வைத்திருக்க முடியும்?
எதிர்க்கட்சியில்கூட நம்பிக்கை தரும் தலைமைத்துவ மொன்றை, யுத்தத்தை மறுதலித்து சமாதானத்தை முன்னெ டுத்துச் செல்லக் கூடிய ஒரு சக்திமிக்க தலைமைத்துவத்தைக் காண முடியவில்லை. சிறுபான்மை இனங்களை மதிக்கக்கூடிய அவற்றுக்காக குரல் கொடுக்கக்கூடிய எந்த ஒரு தலைமைத் துவமும் எதிர்க்கட்சியில் இல்லை.

இலங்கை அரசியல் யாப்பின் பிரகாரம் ஜனாதிபதியாக வரும் தகுதி சிங்களப் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு மாத்திரமே உள்ளது. இலங்கை அரசியலமைப்பின் அத்தியாயம்-2 தனியாக பெளத்த மதத்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் “இலங்கைக் குடியரசில் பெளத்த மதத்துக்கு முதன்மைத் தானம் வழங்கப்படுதல் வேண்டும் என்பதோடு, பெளத்த சாசனத்தைப் பாதுகாத்தலும் பேணிவளர்த்தலும் அரசின் கட்டாய கடமையாக இருத்தல் வேண்டும்” என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

சிங்களவர்களில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் இனவாதி களால் பேணப்பட்டுவரும் பெளத்த பீடங்களைத் திருப்திப்படுத்து பவர்களாகவே காணப்படுவார்கள்.  அவர்களை சிங்களப் பேரின வாதமும் பெளத்த பீடங்களும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்.
அரசியலமைப்பே பேரினவாதத்துக்கு ஆதரவாகக் காணப் படுகிறது. நாட்டின் அமைதியின்மைக்கு இதுவே  அடித்தளமான காரணியாகவும் உள்ளது.

இந்த மோதலின் மூலம் என்ன ? அல்லது யுத்தத்தின் மூலகாரணம் என்ன ?

இலங்கை சுதந்திரமடைந்த காலம் முதல் இருந்து வந்த ஒரு பிளவு தான் இப்போது பாரிய வெடிப்பாக வெடித்துள்ளது. நீண்ட காலத்து இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை அரசு சார்பான அமைப்புகள் புறக்கணித்து வந்ததன் விளைவாகவே பின்னாளில் அது போராட்ட வடிவம் பெற்றது.

1977ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சிக் காலத்திலேயே ஆயுதப் போராட்டங்கள் முனைப்புப் பெற்றன. வடக்கு கிழக்கில் முன்வைக்கப்பட்ட அரசியல் கோரிக்கை களையும் அதனுடன் ஒட்டி நடைபெற்ற ஆயுதப் போராட்டங்களையும் பயங்கரவாதமென்றும் பிரிவினைவாதமென்றும் அரசு அடையாளப்படுத்தியது. இதனைத் தீர்க்கவென்று இராணுவம் சார்ந்த செயற்பாடுகளை அரசு மேற்கொள்ளத் தொடங்கியது. பல்வேறு சந்தர்ப்பங்களிலும் அரசு தமிழர்களுக்கெதிரான போக்குகளை மேற்கொண்டது.

1978ம் ஆண்டு அமுலாக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சிமுறை, அதிகாரங்கள் அனைத்தையும் ஒரு தனிமனிதனிடத்தில் ஒப்படைக்கும் கைங்கரியத்தைச் செய்தது. ஜனநாயகப் பண்புகள் சிதைக்கப்பட்டன. அத்துடன் அரசியல்  வன்முறைகளும் தோற்றம் பெறத் தொடங்கியது.

யாழ்ப்பாண நூலக எரிப்பு, யாழ்ப்பாண மாணவர்களுக்கான பல்கலைக் கழக அனுமதிக்கான அதிகூடிய வெட்டுப்புள்ளிகள் என்பனவெல்லாம் இளைஞர்களை அரசுக்கெதிராக அணி திரள வைத்தது. அதன் பின்னர் இராணுவத்தைச் சேர்ந்த சிலர் வடக்கில் வைத்துக் கொலைசெய்யப்பட்டபோது தமிழர்களுக் கெதிரான மிகப் பாரிய இனவெறியாட்டம் நாடெங்கும் கட்ட விழ்த்து விடப்பட்டது.

1983 ஆடிக் கலவரத்தில் நாடெங்கிலும் வாழ்ந்த அப்பாவித் தமிழர்கள் அனைவரும் தேடித்தேடிக் கொலை செய்யப்பட்டனர். தமிழர்களின் சொத்துக்கள் யாவும் சூறையாடப்பட்டன. சிறைகளில் வாழ்ந்த தமிழர்கள் குரூரமாகச் சித்திரவதை செய்யப்பட்டுக் கொலை செய்யப் பட்டனர்.
இதன் பின்னர் சிங்கள வெறியர்களிடமிருந்து தம்மைக் காத்துக் கொள்ளும் வழியொன்றும் தமக்கான சுதந்திர தேச மொன்றும் தேவையென்ற முடிவு எல்லாத் தமிழர்களாலும் மாற்றுக் கருத்துக்கு இடமின்றி ஏற்றுக்கொள்ளப் படலாயிற்று.

அப்பொழுது காணப்பட்ட ஆயுதக் குழுக்கள் தமக்கிடயே சில கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்து செயற்படத்தொடங்கின. இந்த ஒற்றுமையானது இந்தியாவுக்குத் திகிலை ஏற்படுத்தவே தனது உளவுப் பிரிவின் உதவியுடன் இயக்கங்களின் ஒற்றுமையைச் சிதைக்கும் முன்னெடுப்புகளை இந்தியா மேற்கொண்டது. பின்னர் இயக்கங்களிடையே காணப் பட்ட பொது ஒருமைப்பாடு களைக்கப்பட்டது. அவை தமக்குள் மோதிக்கொள்ளத் தொடங்கின.

இந்நிலையில் தமிழர்களுக்கான சுதந்திர தாயகத்தை உருவாக்கிக் கொடுக்கும் வல்லமை தமக்கு மாத்திரமே உண் டென்ற முடிவுடன் புலிகள் செயற்படலாயினர். ஏனைய இயக்கங் களைப் புலிகள் தடைசெய்தனர். அதனை மீறியோர் கொலை செய்யப் பட்டனர்.

இங்கு நான் ஒரு சில விடயங்களை மாத்திரமே குறிப்பிட்டுள்ளேன். நான் பிறப்பதற்கு முன்பே தோன்றி வளர்ச்சியடைந்த ஒரு சிக்கல் இது. எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து கொலைகள் மலிந்த ஒரு தேசத்தையே காண்கிறேன். பிரச்சினை களுக்கான தீர்வாக இங்கு படுகொலைகளே காணப்படுகின்றன.

அது எவ்வாறு இந்தளவுக்கு சிக்கலானது அல்லது ஏன் இந்த அளவுக்கு இது தீர்விலிருந்து விலகியது?

இதற்கான பதிலை மிக இலகுவில் ஓரிரு வரிகளில் கூறிவிட முடியாது. எனினும் மிக அண்மித்த காலப் பகுதிக்கு வருவோம். 2002ம் ஆண்டு பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கும் புலிகள் இயக்கத் தலைவர் வே. பிரபாகனுக்கும் இடையில் கொண்டு வரப்பட்ட யுத்த நிறுத்தச் சூழலில் தமிழ் மக்கள் ஓரளவு நிம்மதியுடன் வாழ்ந்தனர். அகதிகளாக இடம்பெயர்ந்து வாழ்ந்த மக்கள் தமக்கான வீடுகளைக் கட்டி மின்சாரம், எரி பொருள், மருந்து உட்பட அடிப்படை வசதிகளைப்  பெற்று புதிய உலகக் கனவுகளுடன் வாழத் தலைப்பட்டனர். ஆனால் அவர்களுக்குக் கிடைத்த அமைதியான வாழ்வு நீடிக்கவில்லை.

இந்த யுத்த நிறுத்தச் சூழலிலிருந்து நிலையான சமாதானத் துக்கான பாதையை அமைத்துக் கொள்ள தமிழ் மக்கள் தவறி விட்டனர். புலம்பெயர்ந்து வாழும் மக்களும் சமாதான முன்னெடுப்புகளின்மீது அதிக அக்கறை செலுத்தவில்லை. அவர்கள்கூட சமாதானத்தைக் கண்டு பீதியுற்றிருந்த வேளையது. தாயகத்தில் சமாதானம் ஏற்பட்டால் ‘திரும்பவும் இலங்கைக்குத் திருப்பி யனுப்பப் பட்டுவிடுவோமோ’ என்ற அச்சம் அவர்களுக்கு மிருந்தது. வெளிநாடுகளில் அவர்களுக்குக் கிடைக்கும் வசதி களை விட்டுவிட்டு யுத்தம் தின்று எஞ்ச வைத்துள்ள பூமியில் வந்து வாழ அவர்கள் பின்வாங்கினர்.
ஆனால் அவர்களுக்குத் தமிழீழம் தேவையாக இருந்தது. அவர்கள் கற்பனையில் வாழ்ந்திட அத்தகையதொரு தேசம் தேவைப்பட்டிருந்தது.  சமாதானச் சூழலைக் கண்டு ஆயுத வியாபாரிகளும் மிகவும் கலக்கமுற்றிருந்தனர். இவர்களை யெல்லாம் திருப்தி செய்யும் வல்லமை சமாதானத்துக்கு இருக்க வில்லை. அப்பாவி மக்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் தேவையானது போரைக் கொண்டு நடத்துபவர்களுக்கும் அதன் மூலம் ஆதாயம் பெறுவோருக்கும் இருக்கவேயில்லை.
நான்கு வருடங்களின் பின்னர் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது ரணில் விக்கிரமசிங்க சமஷ்டித் தீர்வை முன்வைத்தும் மகிந்த ராஜபக்ஷ தமிழீழத்தை நிராகரித்து ஒற்றையாட்சியை முன்வைத்தும் போட்டியிட்டனர்.தேர்தல் நடைபெற்ற தினத்தில் வடக்கைச் சேர்ந்த மக்கள் வாக்களிப் பதைப் புலிகள் தடுத்ததோடு அதனை மீறி வாக்களித்த ஒருவரது கரத்தைத் துண்டித்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. வடக்கைச் சேர்ந்த மக்கள் வாக்களித்திருந்திருப்பார்களே யானால் இன்று ரணில்தான் ஜனாதிபதியாக இருந்திருப்பார். இத்தகையதொரு மனிதப் பேரழிவை தமிழ் மக்கள் சந்தித் திருக்க மாட்டார்கள்.

புலிகள் சமஷ்டி முறையிலான தீர்வினால் தமது அதிகாரம் பலவீன மாக்கப்பட்டு விடும் என்று கருதியதால் ரணில் ஆட்சிக்கு வருவதை விரும்ப வில்லை. மாறாகத்  தமிழீழக் கோரிக்கையை நிராகரித்துப் போட்டியிட்ட மகிந்த ஜனாதிபதியாக வருவதை விரும்பினர். மீண்டும் போரைத் தொடர்வதே அவர்களின் குறிக் கோளாக இருந்தது. தழிழீழத்துக்கான இறுதி யுத்தம் என்று கூறி, நிதி மற்றும் ஆயுத சேகரிப்பில் ஈடுபட்டனர். முழு அளவிலான யுத்தமொன்றுக்காகத் தம்மைத் தயார்படுத்திக் கொண்டனர்.
ஓய்ந்திருந்த அரச பயங்கரவாதம் மகிந்தவின் ஆட்சியில் மீண்டும் கட்டவிழ்த்து விடப்பட்டது. தீர்வுமூலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டிய ஒரு பிரச்சினையைத் தீர்ப்பதற்காக புலிகள் மற்றும் அரசு என்ற இருபக்கப் பயங்கரவாதமும் மீண்டும்  மோதிக் கொள்ளத் தொடங்கின. அரச கட்டுப்பாட்டுப் பகுதிகளில்  அப்பாவிப் பொது மக்களை இலக்கு வைத்துப் புலிகள் குண்டுத் தாக்குதல்களை ஆரம்பிக்க அதை விடவும் பல்லாயிரக் கணக்கில் அப்பாவித் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் பணியில் அரசும் ஈடுபடத் தொடங்கியது.

இவ்வாறுதான்  சமாதானம் உதயமாகுமென்று காத்திருந்த சாதாரண மக்களின் கடைசி நம்பிக்கையையும் சிதைத்துக் கொண்டு போர் என்ற பிசாசு மீண்டும் தாண்டவமெடுத்தாடத் தொடங்கியது.

இலங்கையில் போருக்கு எதிராக ஏதேனும் போராட்டம் நடத்தப்படுகிறதா? அவைகள் என்ன?

மகிந்த ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இத்தகைய சில முன்னெடுப்புகள் இருந்தன. ஆனால் தற்பொழுது போருக்கான ஆதரவும் மகிழ்ச்சி ஊர்வலங்களும் மாத்திரமே இங்கு நடை பெற்று வருகின்றன. போருக்கு எதிரான ஒரு ஊர்வலம் நடாத்தப் பட்டால் அதனை முன்னெடுத்துச் செல்பவர்கள் ‘அடுத்த நாள் உயிருடன் வாழ முடியும்’ என்ற நம்பிக்கையைக் கைவிட்டே செல்ல வேண்டும்.

அறிவியல்தளத்தில் இயங்குபவர்கள் இந்தச் சூழ் நிலையை எப்படி எதிர்கொள்கிறார்கள் ?

அறிவுத்தளத்தில் இயங்குபவர்களுக்கு யுத்தத்தின் மூலம் ஒரு பொழுதும் இந்தத் தேசத்துக்கு அமைதி வரப்போவதில்லை என்பது நன்கு தெரிந்திருக்கிறது.

ஆனாலும் மிக மோசமான அச்சுறுத்தல் நிலவும் நாடுகளில் இலங்கையும் ஒன்றாக இருப்பதால் யுத்தத்துக்கு எதிரான கருத்துகளும் அரசுக்கு எதிரான கருத்துகளும் இங்கு வெளிப்படுத் தப்படுவதற்கு இடமளிக்கப்படுவதில்லை. அதை மீறிச் செயற்பட்டவர்கள் கொலைசெய்யப் பட்டிருக்கிறர்கள். சிலர் உயிரைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்றுள்ளனர். இந்தச் சூழலுக்கு எதிராகக் குரல் கொடுக்கும் எவரும் இங்கு நிம்மதியாக வாழ்ந்து விடமுடியாது.

தமிழ் மாணவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய இரண்டு பல்கலைக்கழகங்களான வடக்கு மற்றும் கிழக்குப்  பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர் பதவிநிலைகள்கூட உயிரச்சுறுத் தலைத் தருவதாகவே காணப்படுகிறது. புலிகளுக்கு ஆதரவா னவர்களே இப்பதவிகளில் நிலைத்திருக்க முடியும். மீறி வருபவர் களின் பின்னால் கடத்தல்கள், பதவிகளிலிருந்து நீங்கச் சொல்லும் அச்சுறுத்தல்கள் என நச்சு நிழல்கள் அவர்களைத் தொடர்கின்றன.

கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு அதிகளவான சிங்கள மாணவர்கள் உள்வாங்கப்பட்டனர். அத்துடன் ஒரு சிங்கள மாணவன் அங்கு கொலை செய்யப்பட்டான். பல்கலைக்கழகத் தினுள்ளும் இனமோதல் ஏற்படும் சூழலை இனவாதக் குழுக்கள் திட்டமிட்டே மேற்கொள்கின்றன.
இவ்வாறே போரினால் பாதிப்படைந்துள்ள இன்னொரு சிறுபான்மையினமான முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளும் உள்ளன. மறைந்த முஸ்லிம் காங்கிரஸ் தலைவரான  எம்.எச்.எம். அஷ்ரப் அவர்கள்  முஸ்லிம்  மாணவர்களுக்கென   தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தை ஏற்படுத்திக் கொடுத்திருந்தார். அங்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம் தேசப் பிரகடனம் என்ற நிகழ்வு பொதுமக்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் அந்தப் பல்கலைக்கழகத்துக்கும் கிரகணம் பிடிக்கத் தொடங்கியுள்ளது.

கடந்த ஆண்டுகளில் சிங்கள மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் அந்தப் பல்கலைக்கழகத்துக்கு உள்வாங்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் அங்கு வந்த மறுதினமே பெளத்த விகாரை ஒன்றை அங்கு அமைப்பதற்கும் அனுமதி கோரியுள்ளனர். அதனைத் தொடர்ந்து பெருமளவிலான இராணுவம் அங்கு குவிக்கப்பட்டு ஏழுக்கும் அதிகமான இராணுவக் காவல் அரண்கள் பல்கலைக்கழக எல்லைக்குள் அமைக்கப்பட்டிருந்தன.

இது சாதாரண நிகழ்வல்ல. இதன் பின்னணியில் பாரிய சதித் திட்டமுள்ளதாக கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் மக்கள் அஞ்சுகின்றனர். அரசின் சிங்களமயமாக்கல் மற்றும் கிழக்கில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்தல் போன்ற திட்டங்களின் ஆரம்பகட்ட நடவடிக்கையாகவே கல்விநிலையங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் இத்தகைய செயல்களைக் கருதுகின்றனர். அரசு பேரினவாதிகளின் ஆதரவுடன்  பல்லாண்டு களுக்கான திட்டங்களை வகுத்துக் கொண்டு தனது செயற் பாடுகளைத் தொடங்கியுள்ளதாக அறிவுத்தளத்தில் இயங்கும் மக்கள் கருதுகின்றனர். அரசின் நிகழ்ச்சி நிரல்கள் ஒரு புறமும் புலிகளின் கொலைப் பட்டியல் மறுபுறமுமாக இரண்டு பயங்கர வாதங்கள் அறிவுத் தளத்தில் இயங்கும் மக்களைக் கட்டுப் படுத்திவைத்துள்ளன.

யுத்தத்தினால் உங்களுக்கு ஏற்பட்ட தனிப்பட்ட அனுபவங்கள் என்ன?
தனிப்பட்ட அனுபவங்கள் என்று கூற முடியாது. ஆனால் மனதளவில் பாதிப்படைந்துள்ளேன். நான் 1998-2000 வரையான காலப்பகுதியில் கிழக்கில் வாழ்ந்தேன். அப்போது அங்கும் சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது.
வயல் நிலங்களுக்குப் போன முஸ்லிம்கள் கொலை செய்யப்பட்டனர். அந்தச் சடலங்களை உழவு இயந்திரப் பெட்டிகளில் போட்டு வைத்திய சாலைக்கு எடுத்து வந்தனர். பிரேத அறை இல்லாத வைத்திய சாலையில் அந்தச் சடலங்கள் வெள்ளைத் துணியினால் போர்த்தப்பட்டு வைக்கப்பட்டிருந்தன. சுகவீனமுற்றிருந்த நண்பர்களை அல்லது அவர்களது உறவினர்களைப் பார்ப்பதற்காக வைத்தியசாலைக்குச் சென்ற சந்தர்ப்பங்களில் இத்தகைய துயர்மிகுந்த சூழல்களை எதிர் கொண்டேன்.

இரவு நேரங்களில் அயல் கிராமங்களில் தாக்குதல்கள் நடை பெறும். அந்தச் சந்தர்ப்பங்களில் நண்பர்கள் என்னை மென் மேலும் அச்சப்படுத்துவார்கள். நான் சிங்களப் பகுதியில் இருந்து அங்கு போயிருந்தபடியால் இராணுவம்மீது எனக்கு எவ்வித அச்சமும் இருக்கவில்லை. சோதனைச் சாவடிகளில் கூட எமக்கு எந்தச் சிக்கல்களும் ஏற்படவில்லை. எமது பகுதியில் இராணுவத் தினருக்கு மக்களிடையே மரியாதை இருந்தது.  ஆனால் புலி களை எண்ணிப் பயந்தேன். புலிகள் எவ்வாறு மக்களைக் கொலை செய்தார்கள் என்பதையெல்லாம் நண்பர்கள் கதை கதையாகக் கூறிக் கொண்டிருப்பார்கள். நானும் கொலை செய்யப் பட்டுவிடுவேன் என்ற எதிர்பார்ப்போடு அதிரும் வெடியோசை களைக் கேட்டவாறு இரவுகளைக் கழித்திருக்கிறேன். எனது முஸ்லிம், தமிழ் நண்பர்கள் சிலரின் வாழ்வும் யுத்தத்தினால் மிகமோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அவர்களின் வாழ்வின் கதைகளும் என்னைப் பாதித்தன.

உங்கள் கடந்த காலத்தைச் சற்று விவரிக்க முடியுமா?

நான் இலங்கையின் வடமேல் மாகாணத்தில் (அரச கட்டுப் பாட்டுப் பகுதி) ஒரு அழகிய சிறிய கிராமத்தில் பிறந்து அம்மம்மாவிடம் (அம்மாவின் தாயார்) வளர்ந்தேன். அம்மம்மாவும் நானும் மாத்திரமே அந்த வீட்டில் வசித்தோம். கிராமத்தைச் சேர்ந்த மற்றப் பிள்ளைகளை விடவும் சற்று வித்தியாசமாகவே வளர்க்கப்பட்டேன். செல்வாக்கான குடும்பப் பின்னணியில் வளரும் எல்லாப் பிள்ளைகளுக்கும் இருக்கும் சில கடப்பாடுகள் எனக்குமிருந்தன. அம்மம்மாவின் அரவணைப்பில்தான் எனது இனிய உலகம் அமைந்திருந்தது.
மிகவும் இனிய சுதந்திரமான சிறுபருவ வாழ்க்கை அம்மம்மாவின் நிழலில் எனக்கு வாய்த்திருந்தது. இரவுகளில் அம்மம்மாவின் வாழ்வில் எதிர்கொண்ட துயரங்களையும் வாய்மொழிக் கதைகளையும் கேட்டபடி து}ங்குவேன். நல்ல தங்காள் கதை உட்படப் பல்வேறு கதைகளை அம்மம்மாவிடமிருந்து கேட்டிருக்கிறேன். நான் அதிகமாகக் கேள்விகளை கேட்கும் பொழுது ‘இவற்றையெல்லாம் யாராவது புத்தகங்களில்  எழுதி வைத்திருப் பார்கள். தேடிப் படியுங்கள்’ என்று அம்மம்மா சொல்வதுண்டு. பின்னர் நல்ல தங்காள் கதையை இணையத்தில் தேடியே நான் படித்தேன். அம்மம்மா சொன்னதற்கு அப்பால் அதிலிருந்து எந்தப் புதிய தகவலும் கிடைக்கவில்லை.

மழைக்கால நாட்களில் வெளியே விளையாட முடியாது. எனவே அம்மம்மாவின் அனுமதியுடன் தாயாரின் புத்தகங்களைக் குடைந்து கொண்டிருப்பேன் (சுமார் 8- 9 வயதுகளில் ) அவை இருந்தவாறே ஒழுங்காக வைத்துவிடவேண்டும் என்ற அம்மம்மாவின் கட்டளையைச் சரியாகப் பின்பற்றுவேன். ஏனெனில் மீண்டும் மீண்டும் அவற்றைப் படிக்கும் ஆவலும் தேவையும் எனக்கிருந்தது. அப்பொழுதுதான் மகாகவியின் குறும்பாக்களை ‘இளம்பிறை’ சஞ்சிகையில் படித்தேன். என்னவென்று தெரியாமல் நகைச்சுவை உணர்வுடன் இருந்தமையாலும் அவற்றுக்கருகே வரையப்பட்டிருந்த  கேலிச் சித்திரங்களின் ஈர்ப்பினாலும் அவை சட்டென்று என் மனதில் பதிந்தன. அவற்றை நான் உரத்துக்கூறி மற்றவர்களைக் கேலி பண்ணுவேன். பின்னர் அவைதான் மகா கவியின் குறும்பாக்கள் என்று அறிந்து கொண்ட பொழுது எனக்கு 20 வயதும் தாண்டியிருந்தது.
நான் வளர்ந்த சூழல் சிங்களச் சூழல். படிக்கும் பத்திரிகைகள், வீட்டுக்கு வெளியே தொடர்பாடல் மொழி என்பவற்றில் எல்லாம் சிங்களமே ஆட்சி செலுத்தியது. வீட்டிலிருந்து 25 கிலோ மீற்றருக்கு அப்பால் அமைந்திருந்த நூலகத்திலிருந்து தமிழ் நூல்களைத் தேடி வாசிப்பேன். இத்தகைய ஒரு சூழலில் இருந்து தான் நான் கவிதை எழுதத் தொடங்கினேன். கவிதை எனக்குத் தானாக வந்தது. எழுதச்சொல்லி யாரும் து}ண்டுதல்  தரவில்லை. நானாகவே எழுதினேன்.

10 வயது வரையும் ஊர்ப்பள்ளியில் பயின்றேன். பின்னர் 15 வயது வரையும் நகரத்தில் கல்வி பயின்றேன்.அதன் பின்னர் அறிவியல் துறையில் உயர்கல்வி பெறுவதற்கான பள்ளிக்கூட மெதுவுமே எமது மாகாணத்தில் இல்லாதபடியால் வெளியூரில் போய் கல்வி கற்கும் துயரமான நிலை ஏற்பட்டது. அம்மம்மாவைப் பிரிவதும் தாயாரின் உதவியின்றி கல்வியைத் தொடர்வதும் என்னால் சகிக்கவே முடியாத விடயங்களாக இருந்தன.  
பின்னர் பல்கலைக்கழகக் கல்வி வாய்ப்பும் கிடைக்கப் பெற்றது. அதே சந்தர்ப்பத்தில் ஆசிரியத் தொழில் வாய்ப்பும் கிடைக்கப் பெற்றது. பல்கலைக்கழகம் செல்வதன்மூலம் எனக்குக் காத்திருந்த தொழில் வாய்ப்பு என்னை ஊரைவிட்டு நிரந்தர மாகவே  பிரித்துவிடும் என்ற காரணத்தினால் அதனைக் கைவிட்டு விட்டு ஆசிரிய பணியைத் தேர்ந்தெடுத்தேன். மீண்டும் கல்வி மாணிக் கற்கைக்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தேன். அந்தப் பாட நெறியைக் கற்கும் வாய்ப்பு கொழும்பில் இருந்தபடியால் அதையும் கைவிட வேண்டிய தாயிற்று.

எப்பொழுதும் அமைதியாக வாழவிரும்புகிறேன். அப்படியே வாழ்ந்தும் வருகிறேன். சிங்கள மக்கள் பெரும் பான்மையாகவுள்ள ஒரு பிரதேசத்திலேயே எனது ஊர் காணப்படுகின்றது. எழுத்துச் சூழல் இங்கு இல்லை. தமிழ் நூல்கள் சஞ்சிகைகள் எவையும் இங்கு கிடைப்பதில்லை. அவற்றை நான் வெளியில் இருந்தே பெற வேண்டியுள்ளது. எனது கவிதைதான் எனக்கு நண்பர்களைத் தேடித் தந்தது. இணையமும் தொலைபேசியுமே நண்பர்களை இணைத்து வைத்துள்ளது. இதுவரையும் நான் முகம் காணாதவர்களே நண்பர்களாகவும் இருக்கின்றனர்.
பெண்களின் சுதந்திரம், குடும்ப வாழ்க்கையை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?
குடும்ப வாழ்வுக்குள் பெண்ணுக்கு எங்கே சுதந்திரம் இருக்கிறது? சமைப்பதிலும் வீட்டுவேலைகளிலும் ஆணின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் தினமும் 18 மணித்தியாலங்களுக்கும் மேலாக உழைக்கும் ஊதியமற்ற தொழிலாளியாகவே பெண் இருக்கிறாள். இத்தகைய மெச்சப்படாத உழைப்பின் இறுதியிலும் ஆண் அவளைக் குறை காண்பவனாகவும் நிம்மதியைச் சீர் குலைப்பவனாகவுமே அதிகமான குடும்பங்களில் காணப்படுகிறான். ஆண்தான் பெண்ணுக்கான எல்லாத் துயரங் களையும் வீட்டுக்குள்ளும் வீட்டுக்கு வெளியேயும் கட்டமைத்து
வைத்திருக்கிறான்.

காதல், திருமணம், காமம் குறித்து உங்கள் கருத்துக்கள் என்ன?

காதலிக்கப்படும்போது எந்த ஒரு காதலனும் தனது காதலியை கண்ணுக்குள் வைத்துக் காப்பதாக கற்பனைகளைச் சொல்லி  அவளிடம் அதிகப்படியான எதிர்பார்ப்புகளை வளர்த்து விடுகிறான். அது அப்படியே நடை பெற்றால் பெண்கள் இவ்வளவு துயரங்களை எதிர்கொள்ள மாட்டார்கள். ஆனால் இடையிலேயே அவளைக் கைவிட்டுவிடுகிறான். அதையும் தாண்டி  திருமணம் முடிவடைந்தால்  துரதிர்ஷ்டவசமாக அவன் கணவனாக மாறிவிடுகிறான். அங்கிருந்தே பெண்ணுக்கான எல்லாத் துயரங்களும் ஆரம்பமாகின்றன.

உலகில் அமைதி நிலவவேண்டுமானால் அடிப்படையில் ஆணும் பெண்ணும் ஒழுக்கமுள்ளவர்களாக வாழவேண்டும். மேலைத்தேயம் வகுத்துள்ள பாலியல் சுதந்திரங்கள் நிம்மதி யான வாழ்வைத் தந்ததில்லை. மிருகத்துக்கும் மனிதனுக்கும் இடையிலான வேற்றுமை ஒழுக்கத்தில்தான் தங்கியுள்ளது. அதை மீறும்போதுதான் ‘நீயும் மனிதனா? ’ என்ற கேள்வியை எழுப்புகிறோம். இதை மீறும்பொழுது மிகப் பயங்கரமான எதிர் வினைகளை மனிதகுலம் சந்திக்கவேண்டியிருப்பதை நாம் இன்று கண்கூடாகக் காண்கிறோம்.

இலங்கைச் சமூகத்தில் பெண்களின் நிலை என்ன ?

பள்ளிக்கூடங்களை எடுத்து நோக்கும்பொழுது ஆண்களை விடவும் பெண்பிள்ளைகளே  அதிகளவில் எல்லா இடங்களிலும் திறமையாகக் கல்வி கற்கின்றனர். இலங்கையில் பெண்கள் சுதந்திரமாகவே வாழ்கிறார்கள்.
பெண்ணடிமைத்தனம், பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதிகள் என்பன இங்கு உச்சநிலையில் இல்லை. எனினும் கீழைத் தேய நாடுகளுக்கேயுரித்தான பொதுவான சில துயரங்கள் இந்நாட்டுப் பெண்களுக்கும் உண்டு. வரதட்சிணைப் பிரச்சினைகள் வடக்கிலும்  அதைவிட அதிகமாகக் கிழக்கிலும் காணப்பட் டாலும் ஏனைய பிரதேசங்களில் இழிவளவிலேயே காணப்படு கின்றன. பெரும்பாலும் சிங்களப் பெண்கள் ஏதோ ஒரு தொழிலில் ஈடுபடவே செய்கிறார்கள்.

ஓரளவு வசதியான பெண்கள் பெரும்பாலும் திருமணத்தின் பின்னர் வீடுகளுக்குள்ளேயே முடக்கப்படுகிறார்கள். எனினும் வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களும் யுவதிகளும் பணிப் பெண்களாக வெளிநாடுகளுக்குச் செல்வதனால் அவர் களைச் சார்ந்த குடும்பங்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்குகின்றன. இப்படிச் செல்லும் பெண்கள் பொருளாதாரத்தில்கூட பெரிய முன்னேற்றத்தையடைவதாக இல்லை. கணவன், பிள்ளைகள் என்ற அவளைச் சார்ந்த உறவுகளின் பிணைப்புக் கலைந்து போவதே பெரும்பாலும் நிகழ்கின்றது. தாய்மார்கள் இங்கு விட்டுவிட்டுச் செல்லும் பிள்ளைகளின் எதிர்காலம் சீரழிந்து போகிறது. அத்தகைய பிள்ளைகள் பள்ளிக்கூடத்திலும் சரி, அதன் பிறகு அவர்கள் பிரவேசிக்கும் சூழலிலும் சரி, பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துபவர்களாகவே இருக்கின்றனர். தனது குடும்ப நிம்மதியையும் வாழ்வின் நிம்மதியையும் இழந்தவர் களாகவே இத்தகைய பெண்களில் அதிகமானோர் வாழ்கிறார்கள்.

பெண்களின் சிந்தனைத் தளத்தில் மாற்றம் ஏற்படுமாயின் இந்த சூழல் மாற்றமடையும். அவர்கள் சார்ந்த துயரங்கள் குறைவடையும். பெண்களின் வாழ்க்கைத் தரமும் குடும்ப நிம்மதியும் பேணப்படும்.

போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெண்களின் நிலைமை என்ன ?

போரினால் விதவைகளாக்கப்பட்ட பெண்களின் தொகை மிகவும் அதிகமாயுள்ளது. தமது குழந்தைகளுடன் இவர்கள் கைவிடப் பட்டுக்கிடக்கின்றனர். போரினால் தனது பெற்றோரை, சகோதரர்களை, கணவனை இழந்த கிழக்கைச் சேர்ந்த பெரும் பாலான வறிய குடும்பத்துப் பெண்கள் பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் செல்கின்றனர்.
போரினால் ஊனமுற்றோரும் அகதி முகாம்களில் வாழும் பெண்களும் சொல்லொணாத் துயரங்களைச் சகித்தவாறு வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் அடிப்படை வசதிகள் அற்ற சூழலில் பல்வேறு மனஅழுத்தங்களுக்கு முகம் கொடுத் தவர்களாக வாழ்கின்றனர். இவர்களின் துயரங்கள் உலகின் செவிகளுக்கு எட்டுவதில்லை. இவர்களின் துயரத்துக்குக் காரணமான இருதரப்பினரிலும் எவருமே இந்தப் பெண்களின் துயரங்களுக்கான தீர்வுகளை வழங்கத் தயாராக இல்லை.

 ஆண்கள் தமது அதிகாரங்களுக்காகவும் அரசியலுக்காகவும் போரிட்டுக்கொண்டிருக்கையில் இடையில் சிக்கித் தண்டனை பெற்றுக் கொண்டிருப்பது அப்பாவிப் பெண்கள்தான். அவள் பெற்ற புத்திரர்கள் சண்டையிட்டுக்கொண்டு துயரத்தின் எச்சங்களையும் அவளிடமே கைவிட்டுச் செல்கின்றனர்.

அங்கிருக்கும் பெண்களுக்கான இயக்கங்கள் இந்தச் சூழலை எப்படி எதிர்கொள்கின்றன?

பெண்களுக்கான இயக்கங்கள் தற்போது அதிக முனைப்புடன் இல்லை. பெண்ணுரிமைகளோடு தொடர்புபட்ட சில இயக்கங்களும் யுத்தத்துக்கு எதிராக ‘அன்னையர் முன்னணி’ போன்ற அமைப்புகள் முன்பு காணப்பட்டாலும் அவற்றின் செயற்பாடுகள் எதனையும் தற்போது அறிய முடியவில்லை.

இந்த நிலை குறித்து எழுத்தாளர்களின் எதிர்வினைகள் எவ்வாறு உள்ளன?
மகிந்த ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் யுத்தம் குறித்த எதிர் வினைகள்  முன்னெடுக்கப்பட்டன. யுத்த நிறுத்த காலத்தில் சிங்கள எழுத்தாளர்கள் வடக்கைச் சேர்ந்த தமிழ் எழுத்தாளர்களை கொழும்புக்கு அழைத்து ஒன்றுகூடல் ஒன்றையும் நடாத்தினர். வடக்குக்கும் தெற்குக்குமிடையே அதாவது தமிழுக்கும் சிங்களத் துக்குமிடையே உறவுப் பாலமொன்றை அமைக்க முனைந்தனர்.

அந்தச் சந்தர்ப்பத்தில்  மக்கள் விடுதலை முன்னணியின் (ஜேவிபி) தலைமையிலான இனவாதக் கும்பலொன்று புலி களைக் கொழும்புக்கு அழைத்து வந்து வைத்திருப்பதாகக் கூறி அவர்களைத் தாக்குவதற்காக, ஒன்றுகூடல் நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்தினுள் நுழைந்தது. எனினும் அங்கிருந்த சிங்களக் கலைஞர்களும் எழுத்தாளர்களும் தமிழ் எழுத்தாளர்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வகையில் அரணாக இருந்து காப்பாற்றினர். இந்தச் சம்பவத்தில் தமிழர்களைக்  காப்பாற்ற அரணாக இருந்த  சிங்களவர்களே தாக்குதலுக்குள்ளாயினர். ஆனால் இப்பொழுது எந்த முன்னெடுப்புகளும் இல்லை.

விடுதலைப்புலிகள் எப்படி பெண்களைச் சேர்க்கிறார்கள்?

ஆரம்ப கட்டத்தில் ஆண்களைப் போலவே பெண்களும் தமது விருப்பத்தின் பேரிலேயே இயக்கத்தில் சேர்ந்தார்கள். ஆயினும் 2006இலிருந்து பலவந்தமாகவே பெண்களும் ஆண்களும் இயக்கத்தில் சேர்க்கப்படுகிறார்கள். பெற்றோரின் கதறலுக்கு மத்தியில் பிள்ளைகளைப் பிடித்துக் கொண்டு போகிறார்கள்.

பெண்களும், சிறார்களும் இயக்கத்தில் முக்கிய பங்கெடுப்பதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

யுத்த  தர்மங்களில் ஒன்றுதான் பெண்களையும் சிறுவர்களையும் பாதுகாக்கவேண்டும் என்பது. பாதுகாக்கப்பட வேண்டிய இரு பிரிவினரையும் தமது படையில் இணைத்துக் கொள்வதை மனித உரிமைகளுக்கு எதிரானதொன்றாகவே கருதுகிறேன்.
அப்பாவி மக்களுக்கு எதிரான படுகொலைகளில் பெண் போராளிகளும் ஈடுபடுத்தப்பட்ட சம்பவங்களை அறிந்தபொழுது மிகவும் வெறுப்பு ஏற்பட்டது. இவர்களால் எப்படி பச்சிளம் குழந்தைகளைக் கொலை செய்ய முடிந்தது? மக்களைத் துண்டங்களாக வெட்டிப் பலி தீர்க்க எப்படி முடிந்தது? எந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்பட்டு இவர்களுக்கு இனவெறியூட்டப் பட்டிருக்க வேண்டும்? என்பதையெல்லாம் நினைத்துப் பார்க்கும் பொழுது இயக்கத்தின் மீதான வெறுப்பு மேலோங்கவே செய் கிறது.
கொல்லப்படும் போராளிகளில் மிக இளம் வயதுடைய பிள்ளைகளையும் காண நேர்கையில் இந்தத் தலைமுறைமீது கவிழ்ந்துள்ள சாபத்தை எண்ணித் துயரப்படுவதைத் தவிர வேறெதைச்  செய்ய முடியும்?

தமிழ் இனப்பிரச்சினை குறித்து ஏதேனும் தீர்வை உங்களால் முன்வைக்க முடியுமா?

மன்னிக்கவேண்டும். தீர்வுகளை முன்வைக்கக்கூடிய எத்தகைய அரசியல் அறிவும் என்னிடமில்லை. ஆனால் ஒரு ஆயுதக் குழுவுடன் பேச்சு வார்த்தை நடாத்துவதன் மூலம் மக்களுக்கான தீர்வை வழங்கி விடமுடியாது. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பொதுப்பிரச்சினை மக்களின் தீர்ப்புக்காக மக்களிடம் சமர்ப்பிக்கப் படவேண்டும்.
தமிழ் இனப்பிரச்சினை  மாத்திரமல்ல முஸ்லிம்களும் இந்தப் பிரச்சினைக்குள் சிக்கியுள்ளனர். மலையக மக்களுக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் உள்ளன. தீர்வுகள் பற்றிப் பேசும்பொழுது இந்த மக்களுக்கான தீர்வு களும் முன்வைக்கப்பட வேண்டும்.

யுத்தத்தில் முஸ்லிம்களின் நிலை - நிலைப்பாடு - என்ன?

முஸ்லிம்கள் நடுநிலை வகிக்கவே விரும்பினர். அரசுடனும் அதேபோலப் புலிகளுடனும். ஆனால் இந்த நடுநிலைத் தன்மையை இரு தரப்புமே ஏற்கத் தயாராக இருக்கவில்லை. ஆரம்ப கட்டத்தில், குறிப்பாக, வடக்கு கிழக்கைச் சார்ந்த முஸ்லிம்களிடையே யுத்தத்துக்கான எதிர்ப்பு காணப்பட வில்லை. முஸ்லிம் இளைஞர்களும் இயக்கங்களில் இணைந்திருந்தனர். மக்களும் அதனை சிறுபான்மையினரின் உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டமாகவே பார்த்தனர். ஆனால் 1990இல் முஸ்லிம்கள் மீதான புலிகளின் பாசிசம் மேலோங்கியது.

ஹிட்லரையொத்த இனப் படுகொலைகளை முஸ்லிம்கள் மீது மேற்கொண்டனர். காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் தொழுகைக்குச் சென்றிருந்த 100 இற்கும் அதிகமானவர்களைக் கொன்று குவித்தனர், போலீஸ் பிரிவில் கடமையாற்றிய கிழக்கைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்களைக் கூட்டாகக் கொலை செய்தது, எல்லைக் கிராமங்களில் புகுந்து பச்சிளம் குழந்தைகள் உட்பட கண்ணில் பட்ட அனைவரையும் வேட்டையாடியது, வயல் நிலங்களில் நிகழ்த்தப்பட்ட படுகொலைகள் எனப் பல நூறு சம்பவங்களைப் பட்டியற்படுத்தலாம்.

இந்தப் படுகொலைகளெல்லாவற்றையும்  புலிகள் கிழக்கில் நிகழ்த்திக் கொண்டிருந்த வேளையில் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்களைக் கொலை செய்வதில் பின்வாங்கினர். ஏனெனில் புலிகளுக்கும் அவர்களுக்கும் இடையிலான உறவில் விரிசல் இருக்கவில்லை. எனினும் புலிகள் இயக்க உறுப்பினர்களிடையே முஸ்லிம்கள்மீதான குரோதமும் வெறுப்பும் திணிக்கப்பட்டது. யாழ்ப்பாண முஸ்லிம்களை 2 மணித்தியாலங்களிலும் ஏனைய வட பகுதி முஸ்லிம்களை 48 மணித்தியாலங்களிலும் வெளியேறி விடும்படியான உத்தரவு விடுக்கப்பட்டதோடு புலிகள் செயற்படவும் தொடங்கினர். தம்மோடு எதையுமே எடுத்துச் செல்லக் கூடாது என்றும் கட்டளையிட்டனர். அங்கு தேடிய முஸ்லிம்களின் சொத்துக்கள் யாவும் தழிழீழத்துக்கே சொந்தமானவை என்று கூறி பணம், நகை அனைத்தையும் சூறையாடினர். கல்விச் சான்றிதழ்களைக்கூட  எடுத்துச் செல்லவிடாமற் கிழித்தெறிந்தனர். பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் தமது சொந்த நிலத்தை விட்டு தாம் வாழ்நாள் முழுதும் தேடிய அனைத்துச் செல்வங் களையும் இழந்தவர்களாக ஈவு இரக்கமின்றித் துரத்தப்பட்டனர். இன்று வரையும் அந்த மக்கள் அகதிகளாகவே வாழ்கின்றனர்.

2002இல் பிரபாகரனுடன் நடாத்தப்பட்ட பத்திரிகையாளர் மகாநாட்டில் வைத்து வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவரினால் முன்வைக்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கவில்லை. தற்போது அதைப் பற்றிக் கதைக்கத் தயாரில்லை என்றவாறான ஒரு பதிலைச் சொன்னதாக நினைவில் உள்ளது. முஸ்லிம் மக்களுக்கிருந்த மிகப் பெரிய கேள்வியைக் கடுகடுத்த முகத்துடன் பிரபாகரன் தட்டிக் கழித்தசெயல் அனைவரையும் அதிருப்திப்படுத்தியது.
(அந்த மாநாட்டில் அவர் எந்தக் கேள்விக்கும் சரியான பதிலை முன்வைக்கவில்லை என்பது சிங்கள ஊடகவியலாளர்களினதும் அபிப்பிராயமாக இருந்தது. ஒவ்வொரு கேள்வியின் பொழுதும் அவரது கண்கள் திருதிருவென விழித்தன.  அதிகமான கேள்விகளுக்கு அன்ரன் பாலசிங்கமே பதிலளித்தார்.  இதனால் போலியான ஒருவரையே அந்த மாநாட்டில் பங்குபற்றச் செய்திருந்தனர் எனச் சிங்களவர்கள் சந்தேகித்தனர்)
2002ம் ஆண்டு யுத்த நிறுத்தச் சூழ்நிலையில் கிழக்கில் மீண்டும் முஸ்லிம் மக்கள் மீதான புலிகளின் அழித்தொழிப்புகள் உக்கிரம் பெறத்தொடங்கின. சிங்கள இனவாதம் அவர்களுக்குச் செய்ததையொத்த வன்முறைகளை புலிகள் இயக்கம் அப்பாவி முஸ்லிம்கள் மீது மேற்கொண்டது.
தற்போது கிழக்கில் ஜனநாயகச்  சூழல்  மலர்ந்துள்ளதாக அரசு பொய்ப் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் நிலையிலும் அங்கு முஸ்லிம் மக்கள் தினந்தோறும் பாதிப்புக்குள்ளாகியே வருகின்றனர். தமிழ்-முஸ்லிம்  மக்களின் உறவு விரிசலடைந்தே காணப்படுகிறது.  தற்போது அங்கு புலிகள் இயக்கத்திலிருந்து பிரிந்து வந்த பிள்ளையான் குழு கொலைகளில் ஈடுபட்டு வருகின்றது. புலிகளினால் ஊட்டி வளர்க்கப்பட்ட முஸ்லிம் மக்கள் மீதான குரோதம் அவர்களிடமிருந்து நீங்கவில்லை. இத்தகைய ஆயுதக் குழுக்களை அரசு தன்னோடு அரவணைத்துக் கொண்டுள்ளது.

சிங்களப் பேரினவாதிகள் எவ்வாறு தமிழ் மக்களின் உரிமை களுக்கு மதிப்பளிக்கவில்லையோ அவ்வாறே புலிகளும் முஸ்லிம் மக்களின் உரிமைகளுக்கு மதிப்பளிக்கத் தயாராக இல்லை. அவ்வாறே அப்பாவி முஸ்லிம்களைப் படுகொலை செய்வதையும் நிறுத்திவிடத் தயாராக இல்லை. இந்நிலையில் பொதுவாக எல்லா முஸ்லிம் மக்களும் புலிகளைப் பயங்கரவாத அமைப்பாகவே கருதுகின்றனர்.

நீங்கள் கவிதையெழுத எப்பொழுது ஆரம்பித்தீர்கள்?

பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது 1988 அளவில் கவிதை எழுதத் தொடங்கினேன். ஆனால் படிப்பின்மீதுதான் கவனம் செலுத்தவேண்டும் என்ற கட்டுப்பாட்டினால் அதை விட்டுவிட்டேன். பாடசாலைக் கல்வியை முடித்த பின்னர் 1995ம் ஆண்டளவில் இருந்து மீண்டும் எழுதத் தொடங்கினேன்.
தமிழீழப் போராட்டத்தில் இந்தியாவின் அணுகுமுறையை எவ்விதம் பார்க்கிறீர்கள் ?

இலங்கையில் காணப்பட்ட இனப்பிளவுகளைச் சாதகமாகக் கொண்டு இலங்கை அரசைப் பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு இந்தியா ஆரம்ப காலத்தில் செயற்படத்தொடங்கியது. அதனடிப் படையில் போராளிக் குழுக்களுக்குப் பயிற்சியளித்து ஆயுதமும் வழங்கி இலங்கையரசுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட வைத்தது.

1985 ம் ஆண்டு காலப் பகுதியில் ஆயுதக் குழுக்கள் தமக்கிடையே சில கோரிக்கைகளை முன்வைத்து அதனடிப்படையில் கூட்டாகச் செயல்பட முடிவெடுத்தன. இந்தக் குழுக்களின் ஒற்றுமை இந்தியாவை அச்சப்பட வைத்ததனால் குழுக்களிடையே பல்வேறு பிளவுகளை உண்டாக்கும் செயலை இந்தியா செய்தது.

இதனடிப்படையிலேயே திம்பு பேச்சுவார்த்தையை இந்தியா ஏற்பாடு செய்திருந்தது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது சில ஆயுதக்குழுக்கள் இந்தியாவின் சதிவலைக்குள் சிக்கின. இதனால் இயக்கங்களிடையே காணப்பட்ட ஒருங்கிணைப்பு சிதைந்தது. இந்த நிலை இந்தியாவுக்குச் சாதகமாகிவிட அது மேலும் சில பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. இதன் பின்னணியிலேயே ராஜீவ் - ஜே. ஆர். ஜயவர்த்தன ஒப்பந்தம் கைச்சாத்தானது.

இலங்கைக்கு விரித்த சதிவலைக்குள் இந்தியாவே சிக்கிக் கொண்டது. இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி தனது முகத்தில் கரி பூசிக்கொண்டது. இந்த வில்லங்கத்தில் அரசியல் முதிர்ச்சியற்ற ராஜீவ் காந்தியை இணைத்துக்கொண்டு இறுதியில் மரணத்தையும் தேடிக் கொடுத்தது.
தொடர்ந்தும் இந்தியா தனது சுயலாபங்களுக்காகவே இலங்கை அரசியலில் களமிறங்கும் செயலைச் செய்கிறது. இந் தியா பயிற்சியளித்து ஆயுதமும் வழங்கி போராட்டத்தைத் தொடக்கி வைத்த ஒரு அமைப்புக்கு எதிராக இப்பொழுது செயல்படுகிறது. தற்போது அது இலங்கை அரசுடன் இணைந்து கொண்டு அந்த இயக்கத்தை முற்றுமுழுதாக அழிக்கும் பணியில் இறங்கியுள்ளது. இந்தியா தனது நலனுக்கு எது சாதகமாக அமையுமோ அதைத்தான் செய்து வந்துள்ளதே தவிர, தமிழ் மக்கள் குறித்தோ அவர்களின் பிரச்சினைகள் குறித்தோ ஒருபோதும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. ஆரம்பத்தில் அமெரிக்கா ஈராக்கில் சதாமுக்கு ஆயுதங்களை வழங்கி ஈரானுக்கு எதிராக அதனைத் து}ண்டிவிட்டு, பின்னர் அதே சதாமைக் கொன்றொழித் ததைப் போலவே இந்திய அரசும் இலங்கை விடயத்தில் நடந்து கொள்கிறது. இலங்கை மக்கள் மீதான எந்தக் கரிசனையும் இந்தியாவுக்கு இல்லை.

இந்தியா இந்நிலையில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?

இந்தியா இதுவரையும் இலங்கை மக்களுக்காக எந்த நன்மை யையும் செய்துவிடவில்லை. இங்குள்ள இனவாத சிங்கள அரசி டமிருந்து நாம் எதை எதிர்பார்க்க முடியாதோ அவ்வாறே தற்போது அங்குள்ள அரசிடமிருந்தும் நாம் எதனையும் எதிர்பார்க்க முடியாது.

அதே நேரம் யார் சொல்வதையும் கேட்க மறுக்கும் திமிர் பிடித்த இலங்கை அரசு இந்தியா சொல்வதைக் கேட்டுவிடப் போவதில்லை. இந்தியா ஏனைய நாடுகளுடன் இணைந்து இனப் பிரச்சினைக்கு சரியான தீர்வுத் திட்டத்தை, மக்கள் ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுத் திட்டத்தை முன்வைக்கும் முயற்சிகளை மேற்கொள்ள இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் பணியில் இறங்க வேண்டும். இதற்கான அழுத்தத்தை உலக நாடுகள் ஒன்றிணைந்து இலங்கைக்கு வழங்க வேண்டும்.

தனியொரு நாடாக இல்லாமல் பல நாடுகள் கூட்டுச் சேர்ந்து இதயசுத்தியுடன் இச்சிக்கலில் இருந்து அப்பாவி மக்களை விடுவிக்கும் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கை அரசையும் பேரினவாத பெளத்த பீடங்களையும் கட்டுப்படுத்தும் வல்லமை உள்ள ஒரு சக்தியினால் மாத்திரமே பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்வைப்பதும் நடைமுறைப்படுத்துவதும்  சாத்தியப் படக்கூடும். தற்போது அங்கிருக்கும் அரசு இதில் எதையும் செய்யாது என்பதை நன்கறிவோம்.

உயிர்நிழல்  இதழ் : 31
இந் நேர்காணல் ‘மாத்ரு பூமி’ என்கின்ற மலையாள வார இதழில் 04.05.2009 வெளியானது.  நேர்கண்டவர் ரி. டி. ராமகிருஷ்ணன்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

FM

FM





Popular Post

Powered by Blogger.

- Copyright © நிழலின் தடம் -Metrominimalist- Powered by Blogger - Designed by Johanes Djogan -